தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி&காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ”சாக்தஸ்ரீ” சத்குரு சீனிவாச சித்தர் இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகம் முழுவதும் பாரம்பரிய சிறப்புமிக்க எண்ணற்ற பெரிய அளவிலான கோயில்கள் உள்ளன.
இதுபோக ஏராளமான சிறுகுறு கோயில்களும் நிறைந்துள்ளன. இந்த கோயில்களுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து இறைவனை வணங்கி சென்று வருகின்றனர்.
பொதுவாக தமிழகத்திலுள்ள கோயில்களில் அன்றாட வழிபாடுகள், திருவிழாக்கள், பண்டிகைகால வழிபாடுகள் தடையின்றி நடத்திட ஏதுவாக கோயில்களுக்கு என்று நமது முன்னோர்கள் ஏராளமான நிலங்களை தானமாக கொடுத்துள்ளனர்.
முழுக்க முழுக்க கோயில்களுக்கு சொந்தமான இந்த நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் மூலமாக கோயிலுக்கு தேவையான நிகழ்வுகள் செய்யப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சொந்தமான இடங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள், வாடகைக்கு குடியிருப்பவர்கள் அதற்கான தவணைப்பணம் செலுத்தாமலே இருந்து வருகின்றனர்.
அதோடு சிலர் கோயில் நிலத்தை தமது பெயருக்கு சொந்தம் என்ற வகையிலும் உரிமை கோரி அபகரித்தும் வருகின்றனர். இதனால் கோயிலுக்குரிய உபரி வருமானம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலங்களை எல்லாம் மீட்டுத்தர வேண்டும் என்று என்னை போன்ற ஆன்மீக அன்பர்கள் அனைவரும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம்.
இப்படிப்பட்டச்சூழலில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு கோயில் நிலங்களை தனிநபருக்கு வழங்கும் முடிவினை கையில் எடுத்துள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
இதற்கேற்ப சமீபத்தில் கரூரில் சில கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனிநபர்களுக்கு பட்டா செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை ஆணையரின் ஏற்பாட்டில் இதனை துறை சார்ந்த அதிகாரிகள் செயல்படுத்தியுள்ளது மிகுந்த வருத்தம், அளிப்பதோடு இச்செயல் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் பலகோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் எல்லாம் தனிநபர் வசம் எளிதில் போய் சேர்ந்து விடும்.
அதன்பிறகு கோயிலுக்கான உபரி வருமானம் முற்றிலுமாக இல்லாமல் போய்விடும். இது ஒரு தவறான நடைமுறையாகும்.
எனவே தமிழக அரசானது இதில் உரிய கவனம் செலுத்தி தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோயில் சொத்துக்களுக்குரிய பட்டாக்களை திரும்ப பெறவேண்டும்.
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள இந்தத் திட்டத்தினை அரசு முற்றிலுமாக திரும்பபெறவேண்டும். அதோடு, ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கோயில் நிலங்கள், கோயில் சொத்துக்கள் அனைதையும் மீட்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதில், தமிழக அரசு உரிய கவனம் செலுத்தாதபட்சத்தில் ஆன்மிக அன்பர்கள், பக்தர்கள், இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தும்பட்சத்தில் அதற்கு முழுஆதரவு தெரிவிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
==========