தூத்துக்கடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் இரண்டு கருத்துகள் வெளிவரும். ஆளுங்கட்சி, “இது மக்கள் நலப் பட்ஜெட்” என்று கூறும். எதிர்க்கட்சிகள், “இது ஏமாற்றுப் பட்ஜெட்” என்று விமர்சிக்கும். ஆனால் பொதுமக்கள் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி ஒன்றுதான். “இந்த பட்ஜெட்டால் என் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?” அதற்கான பதிலை அரசியல் பார்வையில் அல்ல, மக்கள் நலன் மற்றும் சட்ட உரிமைகள் என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும்.
மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? ஒரு சாதாரண குடும்பம் எதிர்பார்ப்பது விலைவாசி குறையுமா? வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா? அரசு மருத்துவமனைகள் மேம்படுமா? அரசுப் பள்ளிகளின் தரம் உயரும்? விவசாயிகளுக்கு உண்மையான ஆதரவு கிடைக்குமா? சிறு வியாபாரிகளுக்கு சலுகைகள் கிடைக்குமா? குடிநீர், சாலை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தரும் பட்ஜெட்டாக இருக்க வேண்டும்.ஒரு நல்ல பட்ஜெட் என்பது கைத்தட்டல்களைப் பெறும் பட்ஜெட் அல்ல. மக்களின் வாழ்க்கையை மாற்றும் பட்ஜெட்டுதான் நல்ல பட்ஜெட். மேலும், மக்களின் வரிப்பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதில் வெளிப்படைத் தன்மை அவசியம். ஒவ்வொரு திட்டத்திற்கும் காலக்கெடு நிர்ணயித்து, அதன் முன்னேற்றம் குறித்து பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் வந்ததும் ஆயிரம் கோடி, இருபதாயிரம் கோடி, நாற்பதாயிரம் கோடி என்று பெரிய எண்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் ஒரு சாதாரண குடும்பத்தின் கேள்வி என்ன தெரியுமா? “எங்கள் வீட்டுச் செலவு குறைந்ததா?” “எனக்கு வேலை கிடைத்ததா?” “என் பயிருக்கு தண்ணீரும் நியாயமான விலையும் கிடைத்ததா?” “அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை கிடைத்ததா?” “எனக்கு லேப்டாப் மட்டும் போதுமா? தரமான கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்குமா?” இதுதான் உண்மையான பட்ஜெட் மதிப்பீடு. காகிதத்தில் கோடிகள் ஒதுக்குவது எளிது. ஆனால் அந்த நிதி மக்களின் கைகளுக்கு சென்று சேருகிறதா என்பதுதான் முக்கியம். கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை நிறைவேற்றப்பட்டன? எத்தனை திட்டங்கள் தொடங்கப்படாமல் கிடக்கின்றன? எவ்வளவு நிதி செலவிடப்பட்டது? இதற்கான கணக்கு பொதுமக்களுக்கு தெரிய வேண்டாமா? நாங்கள் கேட்பது: காலக்கெடு வேண்டும். வெளிப்படைத்தன்மை வேண்டும். மக்கள் கண்காணிப்பு வேண்டும். திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு பட்ஜெட்டின் வெற்றி சட்டப்பேரவையில் கிடைக்கும் கைதட்டலில் இல்லை. விவசாயியின் வயலில் தண்ணீர் வந்தால் அது வெற்றி. இளைஞனின் கையில் வேலை கிடைத்தால் அது வெற்றி. நோயாளிக்கு தரமான சிகிச்சை கிடைத்தால் அது வெற்றி. ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் சுமை குறைந்தால் மட்டுமே அது உண்மையான மக்கள் நலப் பட்ஜெட். எனவே, தமிழக பட்ஜெட் 2026 வெற்றி பெற வேண்டுமெனில், அதன் பலன் அரசின் அறிவிப்புகளிலும் விளம்பரங்களிலும் அல்ல; மக்களின் அன்றாட வாழ்க்கையில் தெளிவாகத் தெரிய வேண்டும். என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.