சாயர்புரம், ஆக.24-
பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கட்டுகளில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டும் வடகால் பாசனப் பகுதி கிராமங்களுக்கு முறையாக தண்ணீர் சென்றடையாததால் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வடகால் பாசன விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேய்குளம் நில சுவான்தார்கள், விவசாயிகள் அபிவிருத்தி சங்க செயலாளர் ஜெய பொன்ராஜ், பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வடகால் வாய்க்கால் மூலம் பேய்குளம், குலையன்கரிசல், கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பாசனக் குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்தப் பகுதிகளை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
வடகால் வாய்க்கால் மூலம் சுமார் 12,800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது மணிமுத்தாறு அணைக்கட்டில் இருந்து சுமார் 250 கன அடி நீரும், பாபநாசம் அணைக்கட்டில் இருந்து 1,250 கன அடி நீரும் கடந்த 20 நாட்களாக வெளியேற்றப்படுகிறது.
கடைமடை பாசன பகுதிகளான ஸ்ரீவைகுண்டம் வடகால் பேய்குளம், குலையன்கரிசல், பெட்டை குளம் மற்றும் கோரம்பள்ளம் குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். ஆடு, மாடுகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. பனை மரங்கள் பட்டுப்போகும் நிலையில் உள்ளது.
கடைமடை பாய்மானத்திற்கு முன் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு குடிநீருக்கு 120 கன அடி தண்ணீர் தான் தேவை. இரு அணைகளில் இருந்தும் சுமார் 1,500 கன அடி நீர் திறந்தும் கடைமடை பாய்மானத்திற்கு தண்ணீர் வரவில்லை. விவசாய நிலங்கள் தவிர்க்கப்பட்டுக்கொண்டே போனால் தங்களுக்கும் இதன் பெரும் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் போராட்டங்களை நடத்தித்தான் விவசாயத்திற்கு தண்ணீர் பெற வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் முற்றிலும் அழிந்து போவதுடன் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.
எனவே, ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் தர வலியுறுத்தி வரும் 27ம் தேதி புதுக்கோட்டை தட்டப்பாறை விலக்கு அருகில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.