தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது குறித்து வெளியாகியுள்ள செய்திகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மதுபான விற்பனையைத் தனியாரிடம் ஒப்படைத்தால், சமூக நலனைவிட லாப நோக்கமே முன்னிலைப்படும். இதனால் மதுபான விற்பனை அதிகரித்தல், கடைகளின் எண்ணிக்கை மற்றும் விற்பனை நேரம் விரிவுபடுத்தப்படுதல், கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வு குறைதல் போன்ற அபாயங்கள் ஏற்படலாம். மதுபானப் பழக்கத்தால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரம், குழந்தைகளின் கல்வி, பெண்களின் பாதுகாப்பு, குடும்ப அமைதி மற்றும் பொது சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. சாலை விபத்துகள், குடும்ப வன்முறை, குற்றச் செயல்கள் மற்றும் கடன் சுமையும் அதிகரிக்கின்றன. நிர்வாகத் திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த வேண்டுமெனில், டாஸ்மாக் கடைகளில் கட்டாய ரசீது, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, கண்காணிப்புக் கேமரா, பொதுமக்கள் புகார் எண் மற்றும் விதிமீறல்களுக்கு உடனடி நடவடிக்கை போன்ற சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்குவது தொடர்பாக தமிழகஅரசு உடனடியாக அதிகார பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும். அத்தகைய திட்டம் பரிசீலனையில் இருந்தால் அதனை முழுமையாகக் கைவிட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் செயல்படும் மதுபானக் கடைகளை அகற்றுவதுடன், மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மறுவாழ்வு மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். மக்களின் உயிர், உடல்நலம் மற்றும் குடும்ப நலனைப் பாதிக்கும் மதுபான விற்பனையைத் தனியார் மயமாக்கும் எந்த முயற்சியையும் சட்ட உரிமைகள் கழகம் கடுமையாக எதிர்க்கிறது. தமிழ்நாட்டில் படிப்படியாக முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.
டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை