தூத்துக்குடியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
பாளை சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், டெல்லியில் மாணவர்கள் மீது நடந்ததாக கூறப்படும் காவல்துறை நடவடிக்கையையும், தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் மீது காவல்துறை மேற்கொண்டதாக கூறப்படும் அடக்குமுறையையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்த தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. சுனில் குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சில பெண்களை போலீசார் தூக்கிச் சென்றும், வலுக்கட்டாயமாக காவல் வாகனத்தில் ஏற்றியும் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜானகி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பூமயில் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர்