தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மதுரை மாநகரின் முக்கிய நீர்வழித்தடங்களில் ஒன்றான பந்தல்குடி கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், கட்டடக் கழிவுகள் மற்றும் செடிகள் அதிகளவில் தேங்கியுள்ளன. மழைக்காலம் நெருங்கி வரும் சூழலில், கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றத் தவறினால், மழைநீர் தடையின்றி வெளியேற முடியாமல் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, உடைமைகள் மற்றும் சுகாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும். எனவே, பந்தல்குடி கால்வாயின் தற்போதைய நிலை குறித்து மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடனடியாக நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கால்வாய் முழுவதும் தேங்கியுள்ள குப்பைகள், கட்டடக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள், செடிகள் மற்றும் நீரோட்டத்தைத் தடுக்கும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, தூர்வாரும் பணிகளை எவ்வித காலதாமதமும் இன்றி தொடங்க வேண்டும் தூர்வாரும் பணிகள் பெயரளவிற்காகவோ அல்லது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மேற்கொள்ளப்படுவதாகவோ இருக்கக் கூடாது. கால்வாயின் தொடக்கப் பகுதியிலிருந்து இறுதிப் பகுதி வரை மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் முழுமையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தூர்வாரப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் மீண்டும் கால்வாயின் கரையோரங்களில் கொட்டப்படாமல், உரிய இடங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் புகார்கள், கருத்துகள் மற்றும் வெள்ள அபாயம் தொடர்பான எச்சரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, மழைநீரை வெளியேற்றும் மோட்டார்கள், அவசரகால மீட்புக் குழுக்கள், தற்காலிக நிவாரண மையங்கள், குடிநீர் மற்றும் மருத்துவ உதவி வசதிகள் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கால்வாயில் குப்பைகள், கழிவுநீர் மற்றும் கட்டடக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுப்பதற்காகத் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். விதிகளை மீறிக் கழிவுகளைக் கொட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி அபராதம் விதிப்பதுடன், சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, குப்பைகள் கொட்டத் தடை விதிக்கும் எச்சரிக்கைப் பலகைகளும் அமைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் முன்வைக்கும் புகார்களையும் வெள்ள அபாய எச்சரிக்கைகளையும் அலட்சியப்படுத்தாமல், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக பந்தல்குடி கால்வாயை முழுமையாகத் தூர்வார வேண்டும். வெள்ளம், தொற்றுநோய்கள் மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கான உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வுகளை மதுரை மாநகராட்சியும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்
மதுரை பந்தல்குடி கால்வாயை உடனடியாகத் தூர்வாரி வெள்ள அபாயத்தைத் தடுக்க வேண்டும் – சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் அறிக்கை