தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் சராசரியாக 2,300-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 1,300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் இல்லாததால், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாகனங்களை வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், வாகனங்களை நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் செல்லும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், வாகனங்களில் வைக்கப்படும் ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல், மாதாந்திர மருந்து மற்றும் மருத்துவச் சீட்டுகள் வழங்கப்படும் பிரிவில் பணிபுரியும் சில செவிலியர்கள் நோயாளிகளிடம் மரியாதையற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், நீண்ட நேரம் காத்திருக்கும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்றும் நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மருத்துவமனையில் கழிப்பறை வசதி, லிப்ட் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளனர். எனவே, வாகன நிறுத்துமிடத்தை விரிவுபடுத்துதல், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் நோயாளிகளிடம் மருத்துவப் பணியாளர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், புகார்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறை, பாதுகாப்பு இல்லாமை, செவிலியர்களின் அணுகுமுறை குறித்து புகார்