தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது 2025- 26ம் ஆண்டு வரையிலான, அதாவது 31-3-2026 வரையிலான காலத்திற்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பு தாரர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அக்கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி ஆணையர் ப்ாியங்கா உத்திரவின்படி, கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அறிவுரையின்படி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 24 மற்றும் 47 வார்டுகளுக்குட்பட்ட தெற்கு காட்டன் ரோடு மற்றும் வடக்கு ராஜா பகுதிகளில் குறைந்தபட்சம் 2023-24ம் ஆண்டு முதலும் அதிகபட்சம் 2018-19 ஆம் ஆண்டிலிருந்தும் சொத்துவரி நிலுவை தொகை ரூ.18000 இலிருந்து 69000 வரை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்களுக்கு முறையாக கால அவகாசம் கொடுத்து அறிவிப்பு வழங்கியும் நிலுவை வரி செலுத்தாதனை முன்னிட்டு மாநகராட்சி அலுவலர்களால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டது. குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி நிலுவையினை 3 நாட்களுக்குள் செலுத்தாவிடில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் திடக்கழிவு மேலாண்மை வரி பாதாள சாக்கடை கட்டணம் போன்ற இனங்களை நடப்பு காலம் வரை செலுத்தி இருக்கிறீர்களா என்பதனை சரி பார்த்து, நிலுவை இருப்பின் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் இதர சட்டபூர்வ நடவடிக்கைகளை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.