
சாயர்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி – காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்குமா?
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை–சாயர்புரம் சாலை பகுதியில், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த திருட்டுச் சம்பவத்தில், கடைகளுக்குள் இருந்த பணம், சிகரெட் பாக்கெட்டுகள், தராசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காணாமல் போயுள்ளதாக கடை உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதுக்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அவர்கள் உடனடியாக தனிப்பட்ட கவனம் செலுத்தி, சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டில் ஈடுபட்ட நபர்களை விரைவாக அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் இரவு நேர ரோந்து பணிகளை காவல்துறை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.