தூத்துக்குடி சோழா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் ஜான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 314 மற்றும் 316(2)-ன் கீழ் சிப்காட் காவல் நிலைய குற்ற எண் 351/2026 ஆக கடந்த 15.05.2026 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின்படி, கடந்த 2025 அக்டோபர் மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த 40 அடி கொண்ட ஒரு கண்டெய்னரில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீனா பட்டாசுகள் இருப்பதை வருவாய் புலனாய்வு இயக்குநகர அதிகாரிகள் கண்டறிந்து, அதை நிறுவனத்தின் யார்டில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். பின்னர் 2026 மே 11ம் தேதி இயக்குநகர அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்ட போது, முதலில் இருந்த 708 பட்டாசு பைகளில் 101 பைகளும், 91 சிலிகான் சீலண்ட் பசை பைகளில் 87 பைகளும் மட்டுமே இருந்ததாகவும், மீதமுள்ள பைகளில் பட்டாசுகள் மற்றும் பசைகள் அகற்றப்பட்டு மணல் உள்ளிட்ட பொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களான நாகராஜன், ராஜேஷ்குமார், வினோத்குமார், ஜெயகிருஷ்ணன் மற்றும் அனுசிதியன்சன் ஆகியோர் கூட்டுச்சதி செய்து நிறுவனத்திற்கு நம்பிக்கை மோசடி செய்து, 607 பட்டாசு பைகள் மற்றும் 4 பைகள் சிலிகான் சீலண்ட் பசையை கையாடல் செய்திருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் ஊழியர்களான நாகராஜன், ராஜேஷ்குமார், வினோத்குமார், ஜெயகிருஷ்ணன் மற்றும் அனுசிதியன்சன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடி தவெக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜேசுதாஸிற்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் துறையினர் ஜேசுதாஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் உதவி ஆய்வாளர் முருகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடியில் சீன பட்டாசு கடத்தலில் தவெக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது