தூத்துக்குடி இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் அறிமுகம், நாட்டின் ரயில்வே வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் அன்னபூர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்தியா அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதன் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக, நாட்டின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் முதல் வணிக ரீதியிலான ஹைட்ரஜன் பயணிகள் ரயில் சேவை ஜெர்மனியில் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவும் தனது சொந்த தொழில்நுட்ப திறனுடன் அந்த வரிசையில் இணைந்துள்ளது. இது ‘தன்னிறைவு இந்தியா’ என்ற பிரதமரின் இலக்கை மேலும் வலுப்படுத்துகிறது. ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், கார்பன் உமிழ்வை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை உருவாக்குகிறது. டீசலுக்கு மாற்றாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதன் மூலம் நீராவி மட்டுமே வெளியேறுவதால், தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்துக்கு இது வழிவகுக்கிறது. மத்திய அரசு ரயில்வே துறையில் மேற்கொண்டு வரும் முதலீடுகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், கட்டுமானம், உதிரிபாக உற்பத்தி, போக்குவரத்து, சிறு மற்றும் குறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மறைமுக வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. வந்தேபாரத், நமோ பாரத், ரயில் நிலைய மேம்பாடு, ரயில்வே மின்மயமாக்கல், சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள், புல்லட் ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இந்திய ரயில்வே உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட்டு வருகிறது. சாலை, ரயில்வே, துறைமுகம், விமான நிலையங்கள், பசுமை ஆற்றல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியாவை முன்னணி நாடுகளுக்கு இணையாக உயர்த்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். ‘வளர்ந்த இந்தியா–2047’ என்ற இலக்கை நோக்கிய இந்த வளர்ச்சிப் பயணம், வருங்கால தலைமுறைகளுக்கு வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்கும் என நம்புகிறேன். இவ்வாறு பாஜக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் அன்னபூர்ணா வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.