தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியருப்பதாவது இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்பது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உறுதியான நிலைப்பாடாகும். ஆனால், தற்போதைய மத்திய பாஜக அரசின் கல்விக் கொள்கைகள் மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி வருகின்றன. குறிப்பாக நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான குழப்பங்கள் மற்றும் தேர்வுகள் தள்ளிப்போவதால் மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் காமராஜர் தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். அதேபோன்று நாடு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே தரத்திலான, ஒரே சீரான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகும். இந்த நோக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘மாணவர்களின் குரல்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி வைத்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் தரமான மற்றும் சமமான கல்வி கிடைக்க அவர் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்போது உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களை நாட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இது கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது. இந்தியா முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளுடன் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும். இந்த கொள்கையை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில், காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மராத்தான் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினாா்.
பேட்டியின் போது மண்டல தலைவர் நிர்மல்கிறிஸ்டோபர், பொதுச்செயலாளா் ஜெபராஜ், உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.