தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடத்தப்படும் புதிய விளையாட்டு போட்டிகள், குறுவட்ட, மாவட்டம் மற்றும் மாநில போட்டிகளில், இந்த ஆண்டும் பயிற்சியாளர்களுக்கு போட்டி நடைபெறும் இடத்தில் உரிய அனுமதி வழங்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறமையை வளர்க்க வேண்டிய இடத்தில், அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதலை மறுப்பது மாணவர்களின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும் செயலாகும்.
குறிப்பாக தொழில்நுட்ப நுணுக்கம் அதிகம் தேவைப்படும் விளையாட்டுகளில், பயிற்சியாளர் இல்லாமல் மாணவர்கள் தங்களது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவது மிகவும் கடினம்.. அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இந்த விளையாட்டுகளின் ஆழமான தொழில்நுட்ப அறிவும், பல ஆண்டுகளான போட்டி அனுபவமும் இருக்கும் என்று கூற முடியாது. ஒரு மாணவர் போட்டி அரங்குக்குள் பயிற்சியாளர் இல்லாமல் தனியாக அனுப்பப்படும்போது, அவர் பெற்றோர் இல்லாத குழந்தை போல் மனஅழுத்தத்துடன் நிற்கிறார். போட்டியின் போது மாணவர் செய்யும் சிறிய தவறை உடனடியாக சுட்டிக்காட்ட, எதிராளியின் விளையாட்டு முறைக்கு ஏற்ப மன உறுதியை அளிக்க, விதி தொடர்பான சந்தேகங்களில் உதவ பயிற்சியாளர் அவசியம் தேவைப்படுகிறார். பயிற்சியாளர் இல்லாத நிலை, மாணவரின் திறமையை மட்டும் அல்லாமல், அவரின் நம்பிக்கையையும் பாதிக்கிறது. பல ஆண்டுகளாக குறிப்பிட்ட விளையாட்டுகளில் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்களை புறக்கணித்து, விதிகளை மேலோட்டமாக மட்டுமே அறிந்தவர்களை வைத்து போட்டிகளை நடத்துவது மாணவர்களுக்கு நியாயமல்ல. ஒரே நாளில் விதிகளை கற்றுக்கொண்டு, ஆழமான விளையாட்டு தெளிவான நுட்பங்கள் இல்லாமல் மதிப்பெண் அளிக்கப்படும் போது, உண்மையில் சிறப்பாக விளையாடும் மாணவர்களே தோல்வியடையும் நிலை உருவாகிறது. தவறான தீர்ப்புகள், மதிப்பெண் குழப்பங்கள், விதி புரிதல் குறைபாடுகள் போன்றவை மாணவர்களையும், பயிற்சியாளர்களையும், பெற்றோர்களையும் உழைப்பை வீணாக்குகின்றன உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த விளையாட்டுகளுக்கான முறையான நடுவர் பயிற்சிகளை பெறாமல் இருப்பதாக பயிற்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஒரு நாள் பயிற்சியில் அவர்கள் நடுவர் ஆக முடியாது. பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை பள்ளி அளவில் தயார் செய்வது உடற்கல்வி ஆசிரியர்களின் பொறுப்பாக இருந்தாலும், சிறப்பு தொழில்நுட்ப விளையாட்டுகளுக்கு மாணவர்கள் பெரும்பாலும் தனி பயிற்சி மையங்களையும், தனி பயிற்சியாளர்களையும் நாடி பயிற்சி பெறுகிறார்கள் என்பது நடைமுறை உண்மை. இவ்வாறான சூழலில், மாணவர்களை உண்மையில் பயிற்சி அளித்து தயார் செய்த பயிற்சியாளர்களை போட்டி நடைபெறும். இடத்துக்குள் அனுமதிக்காமல் இருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாணவ, மாணவிகள் சிறப்பு பயிற்சிகளை தனிப்பட்ட பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுக்கொண்டு போட்டிகளில் பங்கேற்கும் நிலையில், அந்த விளையாட்டின் விதிமுறைகள், தொழில்நுட்ப அம்சங்கள், புள்ளி வழங்கும் முறையை அறிந்த பயிற்சியாளர்கள் போட்டி அரங்கில் இல்லாதிருப்பது நியாயமான போட்டி சூழலை பாதிக்கிறது. உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அந்தந்த விளையாட்டின் ஆழமான விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் தெரியாத காரணத்தாலேயே, பயிற்சியாளர்கள் போட்டி நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படாமல் இருக்கிறார்களா என்ற கேள்வியும் பயிற்சியாளர்கள் மத்தியில் எழுகிறது. இது உண்மையாக இருந்தால், அது மாணவர்களின் உரிமைக்கும் விளையாட்டு நியாயத்திற்கும் எதிரானதாகும். மேலும், தமிழகத்தில் சில விளையாட்டுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சங்கங்கள் செயல்படுகின்றன. ஒரு சங்கம் “நாங்கள் மத்திய அரசு அங்கீகாரம் பெற்றவர்கள்” என்று கூறுகிறது. மற்றொரு சங்கம் “நாங்கள் மாநில அரசு அங்கீகாரம் பெற்றவர்கள்” என்று கூறுகிறது. இன்னொரு சங்கம் “நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம், அங்கீகாரம் எங்களுக்கு கிடைக்கப்போகிறது” என்று கூறுகிறது. இவ்வாறான சூழலில், பள்ளிக் கல்வித் துறை ஏதேனும் ஒரு சங்கத்துடன் மட்டும் இணைந்து போட்டிகளை நடத்தும்போது, மற்ற சங்கங்கள் சார்ந்த மாணவர்களும் பயிற்சியாளர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் போட்டி நடைபெறும் இடத்தில் தேவையற்ற பிரச்சனைகள், புகார்கள், காலதாமதம், மனஅழுத்தம், சார்புநிலை குற்றச்சாட்டுகள் போன்றவை உருவாகின்றன. சில நேரங்களில் குறிப்பிட்ட சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாதகமாக முடிவுகள் வழங்கப்படுகின்றன என்ற சந்தேகமும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உருவாகிறது. போட்டி அரங்குக்குள் மற்ற பயிற்சியாளர்களுக்கு அனுமதி இல்லாததால், தவறான தீர்ப்புகள் குறித்து உடனடியாக கேள்வி கேட்கவும், முறையான மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. இதன் நேரடி பாதிப்பு மாணவர்களுக்கே ஏற்படுகிறது. அரசியல், சண்டை, குழப்பம், சங்க மோதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கான தீர்வு, விளையாட்டு அறிவு இல்லாதவர்களிடம் முழு பொறுப்பையும் ஒப்படைப்பது அல்ல. “நாங்கள் நடுநிலையானவர்களை வைத்துதான் போட்டி நடத்துகிறோம்” என்று கூறுவது மட்டும் போதாது. நடுநிலைமை அவசியம் தான் ஆனால் அதோடு சேர்த்து அந்த விளையாட்டை பற்றிய ஆழமான அறிவும், விதி தெளிவும், தொழில்நுட்ப அனுபவமும் அவசியம். ஒரு விளையாட்டு போட்டி நியாயமாக நடைபெற வேண்டுமெனில், அந்த விளையாட்டின் விதிகள், மதிப்பீட்டு முறை, தொழில்நுட்ப நுணுக்கங்கள், ஆகியவற்றை அறிந்த முறைகள் கொண்டு வரப்பட வேண்டும். இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வசதிகள் அதிகம் உள்ளன. தவறுகள் நடைபெறாமல் தடுக்க புதிய டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக விளையாட்டு விதிகள் முழுமையாக தெரியாதவர்களிடம் முடிவுகளை ஒப்படைப்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கு ஆபத்தானது. அங்கீகாரம் பெற்ற அனைத்து சங்கங்களையும் அழைத்து, அவற்றின் முக்கிய பிரதிநிதிகளை இணைத்து அமைக்கலாம். ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்திலிருந்தும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரதிநிதிகளை சேர்த்து, எந்த சங்கத்துக்கும் சார்பில்லாத முறையில் போட்டிகளை நடத்தலாம். போட்டி நடத்தும் அதிகாரம் ஒரே சங்கத்திடம் மட்டுமே செல்லாமல், பொதுவான கட்டுப்பாட்டு குழு மூலம் நடைபெற வேண்டும். இதனால் சங்க மோதல்களும் குறையும் மாணவர்களுக்கு நியாயமான தீர்ப்பும் கிடைக்கும். அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து, வெளிப்படையான முறையில் போட்டிகளை நடத்தும் போது ஊழல் குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்படும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சங்கத்திற்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படும் போது, அதிகாரிகளுக்கு லஞ்ச லாபம் தரக்கூடிய சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் திறமை புறக்கணிக்கப்படுவதோடு, விளையாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக பயன்படுத்தப்படாமல் கையாடல் செய்யப்படும் சூழலும் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, போட்டி நடத்தும் முறை முழுமையாக வெளிப்படையாகவும், கண்காணிக்கக்கூடியதாகவும், அனைத்து தரப்பினருக்கும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். பயிற்சியாளர்களை முழுமையாகத் தடை செய்வதற்கு பதிலாக, கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கலாம். ஒவ்வொரு பள்ளிக்கும் அல்லது ஒவ்வொரு மாணவருக்கும் பதிவு செய்யப்பட்ட வழங்கலாம். போட்டி அரங்குக்குள் பயிற்சியாளர் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகளை தெளிவாக அறிவிக்கலாம். விதிமுறைகளை மீறும் பயிற்சியாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் சிலரால் பிரச்சனை வரலாம் என்ற காரணத்தால், எல்லா பயிற்சியாளர்களையும் வெளியே நிறுத்துவது நியாயமல்ல. பயிற்சியாளர் என்பது வெறும் வழிகாட்டி அல்ல அவர் மாணவரின் நம்பிக்கை, பாதுகாப்பு, மன உறுதி, விளையாட்டு அறிவு ஆகியவற்றின் ஆதாரம். குறிப்பாக ஏழை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், தனியாக போராடி விளையாட்டு உலகில் முன்னேற முயற்சிக்கும் மாணவர்கள், பயிற்சியாளர் இல்லாத சூழலில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் உழைப்பும் கனவும் தவறான தீர்ப்புகளாலும், வழிகாட்டுதல் இல்லாமையாலும் வீணாகக் கூடாது. போட்டிகளில் அரசியல் வேண்டாம். சங்க மோதல் வேண்டாம். சார்புநிலை தீர்ப்பு வேண்டாம். ஊழல் சந்தேகம் ஏற்படும் சூழல் வேண்டாம். விளையாட்டு நிதி கையாடல் செய்யப்படும் நிலை உருவாகக் கூடாது. மாணவர்களின் உழைப்பு வீணாகக் கூடாது. திறமை உள்ள மாணவர்கள் தவறான முறையில் தோற்கடிக்கப்படக் கூடாது. அதற்காக பள்ளிக் கல்வித் துறை உடனடியாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். பள்ளி விளையாட்டு போட்டிகளில் பதிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, கட்டுப்பாடுகளுடன் போட்டி அரங்குக்குள் அனுமதி வழங்க வேண்டும். தொழில்நுட்ப விளையாட்டுகளுக்கு மற்றும் அந்த விளையாட்டில் அனுபவமுள்ள நியமிக்கப்பட வேண்டும். ஒரே சங்கத்தை மட்டும் சார்ந்து போட்டி நடத்தாமல், அங்கீகாரம் பெற்ற அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளையும் சேர்த்து பொதுவான டெக்னிக்கல் அமைக்க வேண்டும். போட்டி விதிகள், மதிப்பெண் முறை, மேல்முறையீட்டு முறை ஆகியவை போட்டிக்கு முன்பே மாணவர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அந்தந்த விளையாட்டுகளின் விதிகள் குறித்து முறையான நடுவர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஆனால் தொழில்நுட்ப முடிவுகள் முழுவதும் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மட்டுமே வழங்கப்பட வேண்டும். மேலும், மாணவர்களை உண்மையில் பயிற்சி அளித்து போட்டிக்கு தயார்படுத்தும் தனி பயிற்சியாளர்களின் பங்களிப்பை பள்ளிக் கல்வித் துறை அங்கீகரிக்க வேண்டும். மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்கள், கிளப்புகள் மற்றும் தனிப்பட்ட பயிற்சியாளர்கள் மூலம் சிறப்பு விளையாட்டு பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்கும் நிலையை கருத்தில் கொண்டு, அத்தகைய பயிற்சியாளர்களுக்கு உரிய அடையாள அட்டை, பதிவு முறை, நடத்தை விதிமுறை ஆகியவற்றுடன் போட்டி அரங்கில் அனுமதி வழங்கப்பட வேண்டும். தற்போது கடைபிடிக்கப்படும் முறை, அதிகாரிகளை பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் முறையாக இருக்கலாம். ஆனால் எங்களின் வேண்டுகோள், மாணவர்களை பாதுகாக்கும் முறையை உருவாக்க வேண்டும் என்பதே. அதிகாரிகளின் சிரமத்தை குறைப்பது முக்கியம் தான் ஆனால் அதைவிட மாணவர்களின் எதிர்காலத்தை காப்பது மிக முக்கியம். எதிர்காலத்தில் இந்த நிலை மாறினால் மட்டுமே, தமிழக மாணவர்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அதிக பதக்கங்களை வெல்ல முடியும். மாணவர்களின் திறமை, உழைப்பு, கனவு, விளையாட்டு வாழ்க்கை ஆகியவற்றை காப்பாற்றுவதற்காக, பள்ளிக் கல்வித் துறை விளையாட்டு போட்டிகளில் பயிற்சியாளர்களுக்கு உரிய அனுமதி வழங்கி, நியாயமான மற்றும் வெளிப்படையான போட்டி முறையை உருவாக்க வேண்டும் என்று பயிற்சியாளர்கள் சார்பாக சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் செல்வம் கிறிஸ்டோபர் கேட்டுக்கொண்டுள்ளாா்.