தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (59) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் காவல் நிலையத்தில் ஏற்பட்ட கொடூர தாக்குதலால் உயிரிழந்த வழக்கில், மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்து, அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ரூ.84 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய மரணம் என்பது சமுதாயத்தில் மிகக் கொடிய குற்றம் என நீதிபதி ஜி. முத்துக்குமரன் தனது தீர்ப்பில் வலியுறுத்தினார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் S.P. மாரியப்பன் மற்றும் அதன் உறுப்பினர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “சட்டத்தை காக்க வேண்டியவர்களே இவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபட்டது மிகுந்த கவலைக்குரியது. இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள கடுமையான தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற காவல் அத்துமீறல்களுக்கு தடையாக அமையும். நீதித்துறையின் இந்த துணிச்சலான தீர்ப்புக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்” என தெரிவித்துள்ளனர்.