ஈரான் – இஸ்ரேல் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர் முகமது பின் ஸாயத் அல் நஹ்யானுடன் புதின் தொலைபேசி வாயிலாக பேசினார்.
அப்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் தற்போது நடைபெற்றுவரும் மோதல் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். அத்துடன் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த சா்ச்சைக்குரிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான அரசியல் மற்றும் தூதரக முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவா்களும் வலியுறுத்தினார்.
இந்த உரையாடலின்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின் கூறினார். மேலும், இது தொடா்பாக ஏராளமான வெளிநாட்டுத் தலைவா்களுடன் பேசிவருவதையும் அல் நஹ்யானிடம் புதின் எடுத்துரைத்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.