தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் தினந்தோறும் அலைமோதும் கூட்டத்தால் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் மதுபானம் வாங்குவதற்காக திரள்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலின் காரணமாக தள்ளுமுள்ளு, வாக்குவாதம், அடிதடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், சிலர் கூட்ட நெரிசலில் மயங்கி விழும் சம்பவங்களும் ஏற்படுவதால் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
முன்னதாக செயல்பட்டு வந்த 10109 கூட்டம்புளி டாஸ்மாக் கடை மற்றும் 10144 காமராஜ் நகர் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், அங்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் புதுக்கோட்டை டாஸ்மாக் கடைக்கே திரளும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவே தற்போதைய கூட்ட நெரிசலுக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும், கடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் சத்தம், மது அருந்தியவர்களுக்கிடையேயான தகராறு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் காரணமாக அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 10109 கூட்டம்புளி அல்லது 10144 காமராஜ் நகர் டாஸ்மாக் கடைகளில் ஏதேனும் ஒன்றை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதுக்கோட்டை டாஸ்மாக் கடையில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகைப்பட விளக்கம்: புதுக்கோட்டை டாஸ்மாக் கடை முன்பு இரவு நேரத்தில் அலைமோதும் கூட்டம், வாகன நெரிசல் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் சி
ரமங்கள்.